Wednesday, May 16, 2007

அனுமன் கவசம்

காப்பு:

மன்னுயிர் காத்து மனம் நிறைந்த அனுமன்
தன்னிருதாள் போற்றித் தஞ்சக் கவசம் பொன்னாக
என்னாவிலுதிக்க ஏரம்பக் கணபதியே
உன்னருளால் உயர்த்து

கவசம்:

மூவுலகும் நலம் சூழ அருளிடும்
தேவகுமாரனே, தஞ்சம்! தஞ்சம்!
மூண்டிடும் வினைகளைத் தாற்றும் முன்னவா,
முழுவதுமா யெனை ஆண்டிட வேண்டினேன்!

மூலப்பரம்பொருள் என் மனம் காக்க,
முகத்தொடு முழுமெய் அருள்காக்க,
சூலத்தினாலெந்தன் செவி காக்க,
சூட்சுமமாகவே சுந்தரம் காக்க

வாயுபுத்திரன் எந்தன் வாய் காக்க,
வானவனே எந்தன் வதனம் காக்க,
நேயனே எந்தன் நெற்றி காக்க,
நிம்மதியளித்தெந்தென் நாசி காக்க

நீளவுயர்ந்தோனே நா காக்க,
பாசமறுப்பவனே பல் காக்க,
புகலளிப்போனே புருவம் காக்க,
போற்றுகிறேன் கண்பாவை காக்க!

கூரிய நகங்கொண்டு கூந்தல் காக்க,
குணவானே என்றன் கழுத்தைக் காக்க,
மாசறுக்கும் மணியே மார்பு காக்க,
தேசுறு தோளினைத் தாங்கிக் காக்க

பக்திக்கருள்பவனே பிடரி காக்க,
பாற்கடலோன் அடிமை உதடு காக்க,
ஈகைதிறத்தோனென்றன் இடை காக்க,
முழுமுதற்பொருளென்றன் முதுகு காக்க

வாதில் வல்லோனே வயிற்றைக் காக்க,
வடிவழகினன் என் நாபி காக்க,
கதை எடுப்பவன் கைகளைக் காக்க,
கண்ணனின் அடியவன் கருத்தினைக் காக்க

வீம சகோதரன் விரல்களைக் காக்க,
நமனை அழித்தவன் நகங்களைக் காக்க,
நாராயண தூதன் நரம்புகளைக் காக்க,
நம்பிடும் பாலனை நாயகன் காக்க

பிரும்மகுலத்தவன் பிட்டம் காக்க,
குன்றினை எடுத்தவன் குணத்தைக் காக்க,
செந்துவர் வாயினன் செழிதொடை காக்க,
மூலவன் மூட்டினை முன்னின்று காக்க

கருணாமூர்த்தி என் கால்களைக் காக்க,
உரமிகு தோலினன் உள்ளம் காக்க,
காரிருள் வண்ணன், தொண்டன் காக்க,
கருத்துடன் மனமும் கவர்ந்தவன் காக்க

கதிரொளி வானரன் கணைக்கால் காக்க,
"பதி"யென் பாதம் இரந்தும் காக்க,
வானரவேந்தன் கால் விரலினைக் காக்க,
வதனம் சிவந்தவன் வல்லமை காக்க

குலநலம் காப்பவன் குருதியைக் காக்க,
குணமிகு சீலன் எம் குடியினைக் காக்க,
மேன்மை பெருகிட பாரதம் காக்க,
மேதினி செழித்திட மாருதி காக்க

மக்களைக் காத்து மனங்களில் உறைபவன்
மகேசவடிவினன் வல்லமை காக்க,
சிக்கலறுத்துச் சீலம் அளித்தெமைச்
சிறப்புடன் காப்பவன் சீர்தாள் வாழ்க!

மன்னவன் மாருதி! மனங்கவர் சாரதி!
மாதா சீதை யாவர்க்கும் மங்களம்!
சித்தம் கட்டியென் சிரத்தை யாவுங்கொண்டு
முத்தி வேண்டுகிறேன்! அருள்வாய்!

No comments: