விளக்கே... திருவிளக்கே! வேந்தன் உடன் பிறப்பே!
ஜோதி மணி விளக்கே சீதேவிப் பொன்மணியே!
அந்தி விளக்கே அலங்கார பெண்மணியே!
காந்தி விளக்கே காமாட்சி தேவியரே !
பசும் பொன் விளக்கு வைத்து பஞ்சு திரி போட்டு
குளம் போல் எண்ணெய் விட்டு கோலமுடன் ஏற்றிவைத்தேன்!
ஏற்றினேன் நெய் விளக்கு எந்தன் குடி விளங்க!
மாளிகையின் ஜோதியுள்ள மாதாவைக் கண்டு மகிழ்ந்தேன்
மாங்கலயப் பிச்சை மடிப் பிச்சை தாருமம்மா!
சந்தானப் பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா!
பெட்டி நிறைய பூஷணங்கள் தாருமம்மா !
பட்டி நிறைய பால் பசுவைத் தாருமம்மா!
கொட்டகை நிறைய குதிரைகளைத் தாருமம்மா!
புகழுடம்பைத் தாருமம்மா! பக்கத்தில் நில்லும் அம்மா!
அல்லும் பகலும் அண்டையில் நில்லும் அம்மா!
சேவித்தெழுந்திருந்தேன் தேவி வடிவங் கண்டேன்
வச்சிரக்கிரீடங் கண்டேன் வைடூர்ய மேனி கண்டேன்
முத்துக்கொண்டைக் கண்டேன் முழுப்பச்சை மாலை கண்டேன்
சவுரி முடி கண்டேன் தாழைமடல் சூடக்கண்டேன்
பின்னழகு கண்டேன் பிறைப்போல் நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவங் கண்டேன்
கமலத்திருமுகத்தில் கஸ்தூரிப் பொட்டுக் கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலை அசையக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதக வென ஜொலிக்கக் கண்டேன்
காலிற் சிலம்பு கண்டேன் காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனம் குளிர கண்டு கொண்டேன்
அன்னையே அருந்துணையே அருகிருந்து காத்திடுவாய்
வந்த வினையகற்றி மகாபாக்யம் தந்திடுவாய்
தாயாரே உந்தன் தாளடியில் சரணம் என்றே
மாதாவே உந்தன் மலரடியில் நான் பணிந்தேன்
குடும்பக் கொடிவிளக்கே! குற்றங்கள் பொறுத்திடுவாய்!
குறைகள் தீர்த்திடுவாய்! குடும்பத்தைக் காத்திடுவாய்!
தந்தையும் தாயும் நீயே தயவுடனே ரட்சிப்பாய்!
கருணைக்கடல் நீயே கற்பகவல்லி நீயே!
சகலகலா வல்லி தாயே ரட்சிப்பாய்!
தஞ்சம் உனையடைந்தேன்! துக்கமெல்லாம் போக்கிடுவாய்!
அபிராமவல்லி அம்மா! அடைக்கலம் நீயே அம்மா!
No comments:
Post a Comment