Saturday, May 19, 2012

வில்லினையொத்த புருவம்

வில்லினையொத்த புருவம் வளைத்தனை வேலவா அங்கோர் வெற்பு நொருங்கிப்
பொடிப்பொடியானது வேலவா
சொல்லினைத் தேனிற் குழைத்துரைப்பாள் சிறு வள்ளியைக் கண்டு சொக்கி
மரமென நின்றனை தென்மலைக் காட்டிலே
கல்லினையொத்த வலிய மனம் கொண்ட பாதகன் சிங்கன் கண்ணிரண்டாயிரம்
காக்கைக்கிரையிட்ட வேலவா
பல்லினைக்காட்டி வெண் முத்தைப் பழித்திடும் வள்ளியை ஒரு பார்ப்பனக்
கோலம் தரித்துக் கரம் தொட்ட வேலவா

வெள்ளலைக் கைகளைக் கொட்டி முழங்கும் கடலினை உடல் வெம்பி மருகிக்
கருகிப் புகையாய் வெருட்டினாய்
கிள்ளை மொழிச்சிறு வள்ளியென்னும் பெயர் செல்வத்தை என்றும் கேடற்ற
வாழ்வினை இன்ப விளக்கை மருவினாய்
கொள்ளை கொண்டே அமராவதி வாழ்வு குலைத்தவன் பானு கோபன் தலை பத்துக்
கோடித் துணுக்குரக் கோபித்தாய்
துள்ளிக் குலாவித்திரியும் சிறு வன மானைப்போல் தினைத் தோட்டத்திலேயொரு
பெண்ணை மணங்கொண்ட வேலவா

ஆறு சுடர் முகம் கண்டு விழிக்கின்ப மாகுதே கையில் அஞ்சலெனும் குறி
கண்டு மகிழ்ச்சி யுண்டாகுதே
நீறு படக்கொடும் பாவம் பிணி பசி யாவையும் இங்கு நீக்கியடியரை
நித்தமும் காத்திடும் வேலவா
கூறு படப்பல கோடியவுணரின் கூட்டத்தைக் கண்டு கொக்கரித்தண்டம் குலுங்க
நகைத்திடும் சேவலாய்
மாறு படப்பல வேறு வடிவோடு தோன்றுவாய் எங்கள் வைரவி பெற்ற பெருங்கனலே
வடிவேலவா வடிவேலவா வடிவேலவா வடிவேலவா

No comments: